சிறுவன் வயிற்றை கிழித்தால் 1 லி. அழுகிய ரத்தம்! ரிஸ்கான ஆபரேஷன்.. சக்சஸ் செய்த தஞ்சை அரசு ஆஸ்பத்திரி



தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர். பிரகாஷ் தனது பேஸ்புக்கில் செய்துள்ள ஒரு பதிவு வைரலாகியுள்ளது.

இதோ முழுக்க அவரது வார்த்தைகளிலேயே நீங்கள் வாசியுங்கள்:

12 வயது சிறுவன் வயிற்று வலிக்காக பட்டுக்கோட்டையில் இருந்து அனுப்பி இருந்தார்கள் எங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு. பரிசோதனையில் வயிறு வீங்கி இருந்தது  இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது  மேலும் நீர் சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்தான். உடனே அவனுக்கு நெரம்பு வழியாக க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம். மேலும் வயிறு வீங்கி போனது.

ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பதாகவும் ஆனால் காரணம் தெரியவில்லை என்று வந்தது. ரிஸ்க் அனைத்தையும் தெளிவு படுத்திவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். வயிற்றை கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபுடித்தோம் ,,, சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்தோம். குடல் அழுக காரணம் வால்வுலஸ் என்று கண்டுபிடித்தோம் அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று அர்த்தம்.

அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியது. குடல் அறுவை சிகிச்சை செய்தால் 5 நாட்களுக்கு உணவு கிடையாது. ICU இல் வைத்து இரவு பகலாக பயிற்சி மருத்துவரும் , செவிலியர்களும் கவனித்து கொண்டனர். மெதுவாக உடல் தேறியது 6 வது நாள்தண்ணியும் இளநீரும் கொடுக்க ஆரம்பித்தோம். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால் வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது. 9 ஆம் நாள் இட்லி,சாதம் ஆரம்பித்தோம்.

11 நாள் யாரும் எதிர்பார்க்காதது நடந்தது. தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்டு போயுடுச்சுனு அர்த்தம். மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார். பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் நரம்பு மூலம் சத்து மருந்து , மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நரம்பு மருந்துகள் செலுத்தியதில் தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது

ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தான். உடல் தேறி   வீட்டுக்கு போறான் தம்பி.

இது மறுபிறவி இவனுக்கு.

கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான்... இவர்களுக்கு ஒரு ருபாய் கூட செலவு இல்லை. இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்ச ருபாய் இருக்கும். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம்... இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது. என்ன ஒன்று இதை யாரும் வெளியே சொல்வது இல்லை  விளம்பரம் செய்வதும் இல்லை... இவ்வாறு





மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments