CAA-வுக்கு எதிரான நூதன போராட்டம்.



CAA-வுக்கு எதிரான நூதன போராட்டம்... வங்கி வைப்புத்தொகையை மொத்தமாக எடுத்த தேரிழந்தூர் இஸ்லாமியர்கள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து டெபாசிட் தொகையை ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் எடுத்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய மக்கள் நாடுமுழுக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் இந்நிலையில் தேரிழந்தூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து டெபாசிட் தொகையை ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் எடுத்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் வங்கி அதிகாரிகள் ஜமாத்தார்களிடம் வந்து கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள தேரிழந்தூரில், 80 சதவீதம் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகின்றனர். இங்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை ஒன்று உள்ளது. அதில் அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இஸ்லாமிய மக்களே இருக்கின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து நூதனமான முறையில் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இது தேரிழந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பெருமளவில் பாதிப்படைய செய்துவிட்டது.

எனவே வங்கி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, வங்கியின்மேலாளர் மற்றும் ஊழியர்கள் நேற்று தேரிழந்தூர் பள்ளிவாசலுக்கு வருகை தந்து ஜும்மா தொழுகைக்கு பிறகு முஸ்லிம் மக்களிடம் தங்கள் பணத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் .

``எங்களுக்கு வங்கியோ ஊழியர்களோ பிரச்னை இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்; இதுதான் எங்கள் நோக்கம். இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் பணம் எடுத்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இதனை உங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள்" என்று ஜமாத்தார்கள் வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தால் தேரழுந்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாதிப்புக்கு உள்ளானதும், அதன் விளைவாக வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் நேரடியாக ஜமாத்தை சந்தித்தது மன்றாடி கேட்கும் நிலை உருவானதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments