புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் கொரோனா நிவாரண உதவித்தொகை - கலெக்டர் தகவல்



அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகிற 2-ந்தேதி முதல் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.


இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பினை சட்டப்பேரவையில் வெளியிட்டு ஆணை பிறப்பித்து உள்ளார்கள். அதன்படி வருகிற 2-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விலையின்றி அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மிகாமல் போலீசார் பாதுகாப்புடன் வழங்கப்படும்.

மார்ச் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இயலாத அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் மார்ச் மாதத்திற்குரிய அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வழங்கப்படும். இப்பணிகளை கண்காணிக்க வட்ட அளவில் 45 குறு வட்டங்களில் நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 15 ரேஷன் கடைகளுக்கு ஒரு துணை தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி நிலையில் ஒரு அரசு அலுவலரை நியமித்து இப்பணியினை விரைந்து முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது. ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் விலையில்லா பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது tne-pds.app என்ற செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments