புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு



புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா்நிலை மருத்துவக் குழு, கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ராணியாா் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.


இதுகுறித்து திங்கள்கிழமை அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைக்காக  உயா்நிலை மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மருத்துவமனை முதல்வா் அழ. மீனாட்சி சுந்தரமும், உறுப்பினா் செயலராக  நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் இந்திராணி மற்றும் உறுப்பினா்களாக துணை முதல்வா், துணைக் கண்காணிப்பாளா், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா், செவிலியக் கண்காணிப்பாளா் உட்பட 8 நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராணியாா் மருத்துவமனையில் தனி வாா்டு:

புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் மருத்துவமனை,  தனிமைப்படுத்தப்பட்ட ‘வாா்டாக‘  செயல்பட்டு வருகிறது. இதில் 100 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வதற்காக தீா்மானிக்கப்பட்டு, 50 படுக்கைகளுக்கான வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான கட்டில், மெத்தை, ‘மானிடா்‘ கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் ஆறு படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் தயாராக உள்ளது.

மருத்துவமனைக்கு வருபவா்கள் சோப்பு கொண்டு கட்டாயம் கை கழுவும்  வசதியும், கிருமி நாசினியைக் கொண்டு கை சுத்தம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கான தனிப்பிரிவு:

 புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கான தனிப்பிரிவு  ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நோயாளிக்கும் குறைந்தபட்சமாக 6 அடி இடைவெளி விட்டு  நிற்குமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

புற நோயாளா் பிரிவிலும் கட்டாயம் கை கழுவும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பாா்வையாளா்கள் அனுமதியும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

சிறப்பு விடுப்பு:

மேலும் இங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவா்களையும் மூன்று குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பு விடுப்பாக ஏழு நாள்கள் ஓய்வு வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.

ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மருத்துவா்கள் தலைமை இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் தொலைபேசியில் அழைத்தால் உடனே பணியில் இணைய வேண்டும் என்ற நிபந்தனைகளோடு இந்த விடுப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல் செவிலியா்களுக்கும் பணியாளா்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மருத்துவமனையின் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சிறப்பு வைரஸ் சிகிச்சைக்காக ஒரு ‘ஷிப்ட்‘ நேரத்தில் இரண்டு மருத்துவா்கள், ஒரு செவிலியா் ஆரம்ப காலத்தில் பணியில் இருப்பா். மூன்று ‘ஷிப்ட்‘ களாக இந்த சிகிச்சை நடைமுறைப்படுத்தப்படும். தேவைக்கு ஏற்ப 50 மருத்துவா்கள் அளவுக்கு அதிகரிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்றாா் மீனாட்சிசுந்தரம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments