கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு உதவ பிளாஸ்மா தானம் வழங்க 300 தப்லீக் ஜமாத்தினர் விருப்பம்



டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 300 பேர், கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்கு பின் குணமானவர்கள் அளிக்கும் ரத்தத்தில் பிளாஸ்மா தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குணமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பிளாஸ்மாவை தானம் வழங்க முன்வரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முஹம்மது சாத்தும் ஒரு குரல் பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ஜமாத்தார்கள் அனைவரும் தங்கள் பிளாஸ்மாவை வழங்கி கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவ வேண்டும் எனக் கோரியிருந்தார்

இந்நிலையில், பிளாஸ்மாவை வழங்க விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை டெல்லி அரசு திரட்டத் தொடங்கியது. இவர்களில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி தங்கள் பிளாஸ்மாவை வழங்க பலரும் முன்வந்தபடி உள்ளனர். இதில், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று கொண்டு குணமடைந்தவர்கள் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த ஜமாத்தார்கள் தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வட்டாரம் கூறும்போது, “சுல்தான்புரியில் உள்ள கொரோனா முகாமைச் சேர்ந்த 4 ஜமாத்தினர் முதல் நபர்களாக பிளாஸ்மாவை வழங்கி உதவினர். தற்போது 300 ஜமாத்தினர்கள் தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர். ஒருவர் வழங்கும் பிளாஸ்மா 3 பேரின் உயிரைக் காக்க உதவுகிறது” என்றனர்.

பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வருபவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் இருக்கக் கூடாது. கொரோனா சிகிச்சை பெற்று குணமானவர்களின் மருத்துவ விவரங்கள் ஏற்கெனவே டெல்லி அரசிடம் உள்ளது. அதில் இருந்து பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ உகந்தவர்களிடம் ஒப்புதல் பெற்று அதைப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. இவர்களில் ஒருவராக நேற்று முன்தினம் தனது பிளாஸ்மாவை வழங்கி உள்ளார் வாணியம்பாடியைச் சேர்ந்த தமிழரான பாரூக் பாஷா(42).

இதுகுறித்து சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரியாணி கடையின் ஊழியரான பாரூக் பாஷா தொலைபேசியில் கூறும்போது, “நபிகளார் காலத்திலும் உடலில் இருந்து ரத்தம் எடுக்கும் ஹிஜாமா என்ற சிகிச்சை முறை இருந்தது. இது, உடலில் இருந்து ரத்தம் எடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதை காட்டுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து மாலை சென்று இரவு திரும்பினேன். இந்த புண்ணியமான காரியம் செய்த எனது உடலில் எந்த பாதிப்பையும் நான் உணரவில்லை” என்றார்.

மேலும் ஒருவர் குணமடைந்தார்

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் டெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மா சிகிச்சை பெற்று குணமாகி நேற்று வீடு திரும்பியுள்ளார்.

எனவே, தொற்றில் இருந்துகுணமானவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா உதவியால் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments