தமிழக அரசின் தடையால் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும்! -ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!



கரோனாவை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருக்கும் சூழலில், வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றும் அரசியல்கட்சிகளின் சேவைகளுக்கு திடீரென தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு! 


இந்த தடை உத்தரவை கண்டித்துள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ‘’கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என காரணம் சொல்லி, நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல! ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.
                                     
இவர்களுக்கான மருந்து பொருட்களும், உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் அவர்களின் வாழ்வு கேள்வி குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியம். இது பட்டினிச் சாவிற்கு  வழிவகுத்து விடும்.
                    
அனைத்து தரப்பினரும் இணைந்து கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்கிற நிலையில், அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பொதுமக்கள்  பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நிவாரண உதவிகளுக்கு  பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்‘’ என்கிறார் ஜவாஹிருல்லா.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments