GPM மீடியா கொரோனா உதவி குழுமத்திற்கு பொருளாதார உதவி செய்த தனவந்தர்கள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கு நன்றி...!



அஸ்ஸலாமு அலைக்கும், கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசின் 144 தடை உத்தரவு காரணமாக தினக்கூலி மற்றும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில் GPM மீடியா சார்பாக கொரோனா உதவிக் குழுமம் ஏற்படுத்தப்பட்டது.

இக்குழுமத்தின் வாயிலாக உலகெங்கிலும் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சொந்தங்களிடம் பொருளாதார உதவிகளைப் பெற்று கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்குவதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் மொத்தம் 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் இன்னும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அவர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரண பொருட்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், நமது ஊரில் உள்ள பொது நல பணிகளில் ஈடுபட்டு வரும் பொது நல அமைப்புகள் மற்றும் பொது நல வாட்ஸ்ஆப் குழுவினருக்கு GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக பொருளாதார உதவி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று பொது நல அமைப்புகள், பொது நல வாட்ஸ்ஆப் குழுவினர் மற்றும் தனவந்தர்கள் சேர்ந்து மேலும் தங்களுடைய பொருளாதார உதவிகளை விரிவுபடுத்தினர்.

தினக்கூலி மற்றும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை மக்களின் உணவிற்கு தேவையான மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பை வழங்குவதற்காக வேண்டி பொருளாதார உதவியை வாரி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், பொது நல அமைப்புகள், பொது நல வாட்ஸ்ஆப் குழுவினர் மற்றும் பொருட்களை சரியான நபர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் GPM மீடியா கொரோனா உதவிக்குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

GPM மீடியா அட்மின் குழுவினருக்கு இதுபோன்ற பணி முதல் முயற்சியாகும். இது நாள் வரை தங்கள் வாசகர்களுக்கு செய்திகளை மட்டும் தரும் GPM மீடியா, தங்கள் அட்மின்கள் அதிகமான நபர்கள் இந்நேரத்தில் ஊரில் இருந்ததால் இறைவன் நாட்டத்தால் இம்முயற்சி சாத்தியமானது. மேலும் GPM மீடியா தங்கள் வாசகர்களிடம் இம்முயற்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.

1.நிவாரணமாக கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் பல நபர்களிடமிருந்து நிதியாக பெற்று வழங்கப்பட்டது. GPM மீடியா நிதியை சரியான முறையில் தனவந்தர்களிடம் இருந்து பெறப்பட்டு அவற்றை உரிய பயனாளிக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்தது.

2.மொத்தம் நான்கு கட்டங்களாக 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

3.இத்திட்டத்தை தொடங்கும்முன் ஏழைகள் மற்றும் தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிக கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (இதில் முக்கியமாக ஏழைகளுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வரும் GPM பைத்துல்மால் குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

4.இந்த சூழ்நிலையில் என்ன மாதிரியான பொருட்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும் என ஆலோசனை செய்யப்பட்டு, முடிந்த வரை அத்தியாவசிய பொருட்களே நிவாரணமாக வழங்கப்பட்டது.

5.நிவாரணம் வழங்கும் மற்ற சகோதரர்களுடன் இணைந்து மசூரா செய்யப்பட்டதால் தகுதியான அனைவருக்கும் நிவாரண பொருட்கள் சென்றடைய காரணமாக அமைந்தது.

6.விமர்சனம் இல்லாமல் பொதுவாழ்வு இல்லை என்ற கூற்றுக்கிணங்க சில விமர்சனங்களை கடந்தே செயல்பட முடிந்தது. (எத்தனை நபர்கள் பயன் பெற்றார்கள் என்பது தான் நமக்கு முக்கியம், ஏதோ ஒருநாள் நமது காதில் படும் வார்த்தைகள் அல்லவே)

நமதூரில் இன்னும் தேவையுடைய, தங்களுடைய கஷ்டங்களை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாத சில குடும்பங்கள் நமது உறவுகளில் இருக்கின்றனர்.இன்னும் சிலர் நமது அருகிலேயே இருக்கின்றனர். நிச்சயமாக வசதி படைத்தோர் இந்த புனித ரமலான் மாதத்தில் அவர்களை அணுகி அவர்களுக்கு உதவி செய்து, அவர்களின் சந்தோசத்தை கண்டு திருப்தியடைபவர்களாக, இறைப் பொருத்தம் பெறுபவர்களாக மற்றும் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது...

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

மேலும் ஜகாத்தினை முழுமையாக கொடுத்து ஏழைகள் இல்லாத சமுதாயமாக, இச்சமுதாயத்தை மாற்ற முன்வர வேண்டும்.

தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு, இனி வரக்கூடிய காலங்களில் ஒன்றுபட்ட சமுதாயமாக, ஏழைகள் அற்ற சமுதாயமாக வாழக்கூடிய பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு..,
GPM மீடியா அட்மின் குழு.
கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments