புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய உச்சமாக 111 பேருக்கு கொரோனா பாதிப்பு.!



மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலாளருக்கு தொற்று உறுதியானதால் 2 வங்கிகள் மூடப்பட்டன.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான பட்டியலில் இதுவரை இல்லாத அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டது. நேற்று ஒரே நாளில் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,299 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை 637 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 76 பேர் குணமடைந்தனர். மேலும் 645 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 17 ஆக உள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ்காரர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நகராட்சி மூலம் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அறந்தாங்கியில் 4 பேருக்கும், சிலட்டூரில் ஒருவருக்கும், பூவற்றக்குடியில் ஒருவருக்கும் என 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அறந்தாங்கியில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த வங்கி நேற்று மூடப்பட்டது. 

மேலும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், அந்த வங்கி அருகே உள்ள கடை மற்றும் அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை ஆகியவை மூடப்பட்டன. அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கட்டிடத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டி சுப்பன்நாயக் தெருவை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இவர் திருமயத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக பணியாற்றும் 52 வயது பெண்ணுக்கும், அவரை தினமும் சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரும் 17 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த சுகாதார நிலையம் 3 நாட்கள் மூடப்பட்டது. மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த 51 வயது ஆணுக்கு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments