புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 2 ஆயிரம் வீடுகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த நடவடிக்கை.! கலெக்டர் பேட்டி.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பழைய அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா நல மையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தற்போது 600-க்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று இரவு அதிரடியாக 2 மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது உணவுகளை, கலெக்டர் சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை அறிந்து கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவர்களுக்கு செய்துள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், உணவின் தரம் நல்ல முறையில் உள்ளது. 

ஆனால் அதனை வழங்குவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் கூறினர். நாளை(இன்று) முதல் நோயாளிகளுக்கு உணவுகளை வழங்குவதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து, சென்னையில் இருந்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் வந்து டாக்டர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் ஆயிரத்து 728 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 5 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக புதுக்கோட்டையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 2 ஆயிரம் வீடுகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒரு வீட்டிற்கு 3 பேர் வீதம் தங்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 ஆயிரம் வீடுகளை கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் நாளை(இன்று) முதல் பயன்படுத்தப்பட உள்ளது, என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments