புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி தொடக்கம்.! பொதுமக்கள் ஒத்துழைக்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்.!



புதுக்கோட்டை நகராட்சியில் சிறப்பு செவிலியர்கள் குழு மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா கண்டறியும் பணி தொடங்கப்பட்டது.


புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி கண்டறியும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக செவிலியர்கள் கொண்ட குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் திட்டம் தொடக்க நிகழ்வு புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் கண்டறிவதற்காக 70 பேர் கொண்ட பயிற்சி செவிலியர்கள் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்வர்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா, பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments