புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர் இறப்பு: டாக்டர்கள் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம்.!



புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 3 பேர் இறந்தது குறித்து டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு ‘டீன்‘ கடிதம் அனுப்பினார்.


புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவத்தன்று ஒரே நாளில் 3 நோயாளிகள் இறந்தனர். இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு டீன் பூவதி கடிதம் அனுப்பினார். இதுகுறித்து டீன் பூவதியிடம் கேட்ட போது கூறியதாவது:-

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளது. நோயாளிகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை. சிகிச்சையில் இருந்தவர்கள் இறந்தால் அதற்கான காரணத்தை அன்றைய தினம் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்பது உண்டு. இது வழக்கமான நடைமுறை தான்.

சிகிச்சையில் இருந்தவர்களில் வயதான 3 பேர் ஒரே நாளில் இறந்தனர். இதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன். இதற்கான பதிலை அவர்கள் கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். இது ஒரு துறைரீதியான வழக்கம். ஆனால் இதனை ஏன்? பெரிதுபடுத்தினார்கள் என்று தெரியவில்லை. மருத்துவர்கள் உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், பணியில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை சுட்டிக்காட்டு குறிப்பிடுவேன். சில நேரங்களில் வாய்மொழியாக விளக்கம் கேட்பது உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

0 Comments