அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு மகனுடன் பெண் தீக்குளித்து தற்கொலை



அறந்தாங்கி அருகே மகனுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மற்றொரு மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாட்டை சேர்ந்தவர் முத்து(வயது 45). இவரது மனைவி ராதா(40). இவர்களுக்கு அபிஷேக்(13), சபரி (11) ஆகிய 2 மகன்கள். இந்தநிலையில் ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், முத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மன வேதனை அடைந்த ராதா, நேற்று இரவு தனது 2 மகன்கள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி விட்டு தனது உடலிலும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் சம்பவ இடத்திலேயே ராதா, சபரி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். அபிஷேக் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபிஷேக்கை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

0 Comments