ஏழை மாணவிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை





புதுக்கோட்டை மாவட்டம், போரம் கிராமத்தில் சத்யா என்ற மாணவி ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும், அவருடைய தாயார் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மாணவி சத்யாவிற்கு அரசின் சார்பில் தேவையான இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற உடனடியாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சத்யாவின் தாயாருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவி சத்யாவிற்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணை கடந்த 7-ந் தேதி வழங்கப்பட்டது. அந்த இடத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையும், சத்யாவின் தாயாருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மாணவி தங்கு, தடையின்றி கல்வி கற்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments