புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மானியத்தில் வீடுகள், கழிவறைகள் கட்டிய பயனாளிகள் பட்டியலை ஊராட்சி மன்ற தகவல் பலகையில் ஒட்ட கோரிக்கை.!



மத்திய, மாநில அரசுகளில் முழு மானியத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிவறைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக ஊராட்சிமன்றத் தலைவர்கள் இல்லாத காலத்தில் தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் ஊராட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் பயனாளிகள் பட்டியலை கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம் வடக்கு ஊராட்சிகளில் இளைஞர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும், இணைய வழியாகவும் பெற்றுள்ளனர். 

அதில் சொந்த செலவில் கழிவறைகள் கட்டிய நிலையில் அரசு மானியத்தில் கட்டியவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதே போல பல வீடுகளும் கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பொது தகவல் பலகையிலும் கடந்த 3 வருடங்களாக பயனடைந்த பயனாளிகள் பட்டியலை வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என்று பொதுமக்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments