கோட்டைப்பட்டினத்தில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி..!




கோட்டைப்பட்டினத்தில் மீனவர் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டைப்பட்டினம் பல்நோக்கு பேரிடர் கட்டிடத்தில் நடைபெற்றது. 
இதற்கு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கி பேசுகையில் இப்பகுதியில் மீன்வளத்துறையின் சார்பாக மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் பெண்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக கடல்பாசி வளர்ப்பு, மிதவை கூண்டு மூலம் மீன் வளர்த்தல், வலை பின்னுதல், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய் எவ்வாறு செய்வது மற்றும் இப்பகுதியில் கிடைக்கும் மீன், இறால், நண்டு, போன்றவற்றை வெளி நாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது, மீனவ இளைஞர்கள் கடல்படையில் எவ்வாறு சேர்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சியான வெல்டிங், பிட்டர், படகு எஞ்சின் மெக்கானிக் போன்ற பயிற்சிகள் நடத்த மீன்வளத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

அதனால் இப்பகுதியில் உள்ள மீனவ சமுதாயதை சேர்ந்த இளைஞர்கள் இது போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறனை வளர்ப்பதோடு சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் குமரேசன், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் சதீஷ், செல்வேந்திரன் வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி கவியரசன், ஊராட்சி துணை தலைவர் அக்பர் அலி மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments