புதுக்கோட்டையில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்..!




புதுக்கோட்டையில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சம்பா சாகுபடி

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா நெல் சாகுபடி மற்றும் மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் 2,469 மெட்ரிக் டன் யூரியா, 1,184 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,054 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3,449 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உர விற்பனையாளர்கள்

உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வகையில் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உரத்தின் வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

விவசாயிகள்

மேலும் விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்க வேண்டும். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கச் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04322 221666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆய்வின்போது வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரக் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments