புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக முன்னேற்பாடு.. தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை.!



வருகிற 1-ந் தேதி முதல் 10 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக முன்னேற்பாடு குறித்து தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்ததால் பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்தார். 

10 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுவதும் குறித்தும் தெரிவித்திருந்தார். மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளையும் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக முன்னேற்பாடுகள் ஏதேனும் நடைபெற்று வருகிறதா? என கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து எங்களுக்கு எந்த விதமான சுற்றறிக்கையும் இதுவரை வரவில்லை. ஓரிரு நாட்களில் வந்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

இதற்கிடையில் அரசு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் 10 முதல் பிளஸ்-2 வரை படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்களிடம் கலந்து பேசி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:- பள்ளிக்கு 50 சதவீதம் ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் வருகைக்கு ஏற்ப ஆசிரியர்களை பணிக்கு வர ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம். ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர். 45 வயதிற்கு மேல் உள்ள தங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என கலக்கமடைகின்றனர். இதனால் அவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று, அவர்களது சம்மதத்துடன், அதற்கான கடிதத்துடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோரிடம் வகுப்புகள் நடைபெறும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் படி வகுப்புகள் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments