வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2021-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 

அதனை தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அறந்தாங்கி உதவி கலெக்டர் அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட அலுவலகங்களில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? எனவும், தங்களது பெயர், விவரங்கள், புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8-யு-லிலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். 

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் தங்களது விண்ணப்பங்களை இன்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை மேற்கண்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும் வருகிற 21-ந்தேதி, (சனிக்கிழமை) 22-ந்தேதி (ஞாயிற்றுகிழமை), டிசம்பர் 12-ந்தேதி, (சனிக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம்.

மேலும் மேற்கண்ட அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை படிவங்கள் அளிக்கலாம். விண்ணப்பிக்க வரும்போது கொரோனா பாதுகாப்பு குறித்து, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments