‘புரெவி’ புயல் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.. கலெக்டர் தகவல்.!!



‘புரெவி’ புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், நீர் நிலைகளில் குழந்தைகள் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு வங்கக்கடலில் ‘புரெவி’ புயல் உருவாகி குமரி கடல் பகுதி நோக்கி நகரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய கடல் பகுதியில் பலத்த சூரைக்காற்று மணிக்கு 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. 

இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று (புதன்கிழமை) முதல் 4-ந் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நிவர்’ புயல் கரையை கடப்பதாக இருந்த நிலையில் புதுச்சேரியில் கரையை கடந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரையோர பகுதி என்பதால் கோபாலப்பட்டிணம், மீமிசல், முத்துக்குடா, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் ‘புரெவி’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

படகுகளை பாதுக்காப்பான இடத்தில் நிலை நிறுத்தியும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதேபோல கனமழைக்காலங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர்ப்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எவரும் சென்று குளிப்பதையும், செல்பி எடுத்துக்கொள்வதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இதுகுறித்த எச்சரிக்கை பலகைகளை நீர்நிலைகளுக்கு முன்பாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 மற்றும் 04322-222207 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டி வைக்கக் கூடாது. கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், பசுந்தீவனம் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோய்தொற்று கால்நடைகளை சிகிச்சை அளிக்க அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை மற்றும் புயல் காலங்களில் கால்நடைத்துறையின் சார்பில் ஒன்றியத்திற்கு 10 பேர் வீதம் 130 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு தேவையான தீவனங்கள் மற்றும் வைக்கோல்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழை, வெள்ளம் குறித்த தேவையற்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments