நெல்லையில் நடைப்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்




    
    மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஹோட்டல் அஃப்னா ஹாலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நேற்று 23-01-2021 நடைப்பெற்றது.

இதில் பொருளாளர் எஸ்.எஸ்‌. ஹாரூன் ரசீது, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக், இராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபிதீன், தைமிய்யா, மன்னை. செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.





மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், பாபு ஷாகின்ஷா, நெய்வேலி இப்ராகிம், துரை முகம்மது, அப்சர் செய்யது, காயல் சாகுல் மற்றும் அணிகளின் மாநில செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தேர்தல் நிலைபாடு:

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைபாடுகள் எடுப்பது என்பது குறித்து இச்செயற்குழுவில் விரிவாக கருத்து கேட்கப்பட்டது.

அறுதிப் பெரும்பான்மையானவர்களின் கருத்துப்படி, இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு இச்செயற்குழு வழங்குவதாக தீர்மானிக்கப்படுகிறது.

2. தேர்தல் மாதங்கள்:

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, வருகின்ற பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களை மஜகவின் தேர்தல் மாதங்களாக அறிவிப்பது என்றும், இதில் தேர்தல் நிதி வசூவிப்பது என்றும், தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவது  என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது. 

3.வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக:

மத்திய அரசு இயற்றியுள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4.விவசாயிகளுக்கு பாராட்டு:

டெல்லியில் கடும் குளிரில் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகளுக்கு இச்செயற்குழு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

5. சிறைவாசிகள் விடுதலை:

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்து வாழும் அல்லது 60 வயதை கடந்து வாழும் அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், பாரபட்சமின்றி மனிதாபிமானத்தோடு முன் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், தமிழக கவர்னர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6.மீனவர் படுகொலை:

இலங்கை கடற்படையால் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தமிழகத்தை  சேர்ந்த 4 மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருப்பதை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கிறது.

மத்திய அரசு இது விஷயமாக இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதை ஐக்கிய நாட்டு சபையில் முறையிட வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

7.பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக:

சமீபத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகமெங்கும் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதனால்  விவசாயிகள் பெரும் இழப்பை  சந்தித்திருக்கின்றனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து முழு நிவாரணத்தை பெற்று தர வேண்டும் என்றும், தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தர வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டு கொள்கிறது.

8.கொரோனா முன்னெச்சரிக்கை:

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உயிர் துறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இச்செயற்குழு தனது இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் பொதுமக் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு கூறும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டும் என்றும் இச்செயற்குழு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

9. ஹாஜிகளுக்கு வரிவிலக்கு:

முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மக்காவிற்கு செல்லக் கூடிய ஹாஜிகளுக்கு இதுவரை இருந்து வந்த சலுகைகள்  தொடர வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

ஹஜ் கமிட்டியின் மூலம்  செல்லக்கூடிய ஹாஜிகளுக்கு வரிவிலக்கு அளித்துள்ளதை போல தனியார் நிறுவனத்தின் மூலம் செல்லக்கூடிய ஹாஜிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

10.பறிபோகும் மாநில உரிமைகள்:

மத்தியில் மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருவதோடு அந்தந்த மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை பறித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

 மாநில அரசின் உரிமைகளை பறிப்பதை மத்திய அரசு நிறுத்தக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும்  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

11.கொரோனா தடுப்பு மருந்துகள்:

உலகையே பெறும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலகமே மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இம்மருந்துகளை மிகவும் கவனமாக பயன்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என இச்செயற்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

12. குடியுரிமை போராட்ட வழக்குகள்:

குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டங்களை  எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்ற அமைதி வழி ஜனநாயக போராட்டத்தில் பங்கு பெற்ற போராளிகள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

13.பாசிசத்திற்கெதிராக அணி வகுப்போம்:

மத்தியில் மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து ஜனநாயக சக்திகளின் குரல்வளையை நெறித்து வருகிறது. மத்திய அரசிற்கு எதிராக பேசினாலே தேச விரோத வழக்குகள்  பதியப்படும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே இது போன்ற பாசிச வாதிகளின் போக்கை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

14.விண்ணை முட்டும் விலைவாசி:

நாங்கள் பதவியேற்றால் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றி வருவதை அனுமதிப்பதை வன்மையாக இச்செயற்குழு  கண்டிக்கத்தக்கது.

இதனால் கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை மேலும் வதைக்கும் விதமாக இதுபோன்ற விலையேற்றம் அமைந்துள்ளது.

எனவே விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட 14 தீர்மானங்களுடன் செயற்குழு நிறைவுற்றது.

தகவல்; 

மஜக.தகவல்தொழில்நுட்பஅணி,
#MJKitWING
#தலைமையகம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments