இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி வந்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது.! பாட்டில், கற்களை வீசியும் இலங்கை கடற்படை அத்துமீறல்..



கோப்புப்படம்
தமிழக மீனவர்கள் மீது பாட்டில், கற்களை வீசி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 45 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் கண்ணாடி பாட்டில் மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு சில படகுகள் லேசான சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த கிருபை, வளன் கவுஷிக், மிக்கோயஸ், கினிங்ஸ்டன், சாம், நியான், பிரைட்டன், கிஷோர், மாரி ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் மீனவர் கிருபைக்கு சொந்தமான படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் ராமேசுவரம், தூத்துக்குடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள 52 மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments