ராமேசுவரத்தில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்...



ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று மீனவ ஒருங்கிணைப்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இன்னாசிமுத்து தலைமை தாங்கினார். இதில் மீனவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 18-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நீதி விசாரணை நடத்த வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். 

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டும் மீட்க முடியாமல் மூழ்கிப்போன படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், 1974-ம் ஆண்டு நடந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை அமல்படுத்த வேண்டும், இந்திய மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தின் முடிவில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 9 பேரை இன்னும் 10 நாளுக்குள் விடுதலை செய்யாதபட்சத்தில் மாநிலம் தழுவிய சாலை மறியல் நடத்தப்படும் என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments