ஒன்றிய தலைவருக்கு தெரிவிக்காமல் தீர்மானங்களை மாற்றியதாக வழக்கு.! புதுக்கோட்டை கலெக்டர் பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.!!



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த மாலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரம்பக்குடி ஒன்றிய தலைவியாக உள்ளேன். கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி கறம்பக்குடி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த தீர்மானங்களில் 78, 79-வது மற்றும் 80-வது தீர்மானங்களை மாற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புதிய தீர்மானங்களை சேர்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கறம்பக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய மின்கம்ப திறப்பு விழா(அரசு விழா) பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. என்னை அழைக்கவும் இல்லை. இதேபோல ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டதற்கும் முறையான அழைப்பு விடுக்கவும் இல்லை. தகவல் தெரிவிக்கவும் இல்லை. 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ன் படியும், 1997-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படியும் அரசு விழாக்கள் குறித்து ஒன்றிய தலைவருக்கு உரிய அழைப்பு மற்றும் தகவல் தெரிவிக்க வேண்டும். நான் பெண் என்பதால் தான் எனக்கு முறையான தகவல் மற்றும் அழைப்பும் அளிக்கப்படவில்லை. 

எனவே அரசு விழாக்கள் குறித்தும், தீர்மானங்களை மாற்றியது குறித்தும் தகவல் தெரிவிக்காதது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments