புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு




தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த  மழையால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா, தாளடி பயிர்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் சேதம் அடைந்தன.

நெல் மட்டுமின்றி மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களும் அதிக சேதத்தை சந்தித்தன. இதனை தமிழக வேளாண் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி உள்ளது.
இந்த குழுவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சே சிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் ஷுபம் கார்க், மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிைையத்தில் அவர்களை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்கள் கார் மூலம் புதுக்கோட்டை வந்தனர். 

பின்னர் அவர்கள் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், களமாவூர் கிராமத்தில் தொடர் மழையால் சேதமடைந்த நெற் பயிர்களையும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேலூர் கிராமத்தில் சேதமடைந்த சோளப் பயிர்களையும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்கோட்டை கிராமத்தில் மரவள்ளி கிழங்கு பயிர்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மத்திய குழுவினரிடம், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 2021 வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 11.67 மி.மீட்டர் ஆகும். ஆனால், இதற்கு மாறாக 208 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக 40,669 எக்டேர் நெற்பயிரும், மக்காச்சோளம் 169 எக்டேரும்,, உளுந்து 218 எக்டரும், துவரை 27 எக்டேரும், நிலக்கடலை 2,238 எக்டேரும், எள் 150 எக்டேரும், பருத்தி 35 எக்டேரும் என மொத்தம் 43,976 எக்டேரும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments