புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை, ஊசிகளால் சீரழியும் வாலிபர்கள்: பரபரப்பு தகவல்கள்




புதுகையில் போதை மாத்திரை, போதை ஊசியால் வாலிபர்கள் சீரழிந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிலரை கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை கணேஷ்நகர் மற்றும் திருக்கோகர்ணம், டவுன் காவல் சரகங்களில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 2 மாதத்தில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி போதை மாத்திரை விற்றதாக புதுக்கோட்டை அடுத்த மச்சுவாடியை சேர்ந்தவர் அஜித்குமாரை (23) கணேஷ்நகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 போதை மாத்திரை, 3 ஊசிகளை பறிமுதல் செய்தனர். கடந்த 22ம் தேதி இரவு போதை மாத்திரை வைத்திருந்ததாக மச்சுவாடியை சேர்ந்த ரஞ்சித்குமாரை (23) கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர். மச்சுவாடி உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் வாலிபர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி வரும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் போதை நகரமாக மாறி வருகிறது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: புதுகை நகர் பகுதியில் சிலர் போதை ஊசி போட்டு கொள்வதில் அடிமையாக இருந்து வருகின்றனர். 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் பலருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் கைது செய்பவர்களிடம் அதிகளவில் மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்வதில்லை. 2 முதல் 10 மாத்திரைகள் தான் அவர்கள் வைத்திருக்கின்றனர்.

அவர்களை பிடித்து விசாரித்தால் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தஞ்சை, புதுச்சேரியில் இருந்து வருவது தெரியவருகிறது. போதை மாத்திரையுடன் வாலிபர்கள் கைதாகும் பகுதிகள், சந்தேகத்துக்கு இடமாக உள்ள மருந்து கடைகளுக்கு போலீஸ் தரப்பில் ஆட்களை அனுப்பி சோதனை செய்கிறோம். ஆனாலும் பெரியளவில் எதுவும் சிக்கவில்லை. அதிக போதை தரும் மாத்திரைகள் கிடைக்கவில்லை என்றால் தூக்கம் வரும் மாத்திரைகளை வாங்கி அதை பொடியாக்கி நேரடியாக தண்ணீரில் கலந்து நரம்பில் ஏற்றி கொள்கின்றனர். இதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. போதை மாத்திரைகள் எங்கு விற்கப்படுகிறது.

யார் மூலம் விற்கப்படுகிறது. புதுக்கோட்டையில் போதை ஊசி விற்கும் கும்பல் ஊடுருவியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.போதை மாத்திரை, ஊசிகளால் வாலிபர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் ஏராளமான வாலிபர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.

தடுக்க என்ன வழி?
மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை, மருந்து சீட்டு இன்றி மாத்திரைகள் விற்பனை செய்ய கூடாது என்ற விதிமுறை உள்ளது. பெரும்பாலான மருந்து கடைகளில் மருந்து சீட்டு இல்லாமலே மாத்திரை, மருந்துகளை வினியோக்கின்றனர். இது போதைக்கு அடிமையான வாலிபர்களுக்கு சாதகமாக உள்ளது. இதை தடுக்க எந்தெந்த மாத்திரைகளை போதை ஆசாமிகள் பயன்படுத்துவார்களோ அந்த மாத்திரைகளை ஆதார் அடையாள அட்டை நகலை வாங்கி கொண்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யலாம்.

பின்னர் ஆதார் அட்டை நகலை மருந்தகங்களின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தால் அந்த முகவரியில் உள்ளவர்களை நோட்டமிட்டு மாத்திரைகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கையை மேற்கொண்டால் கட்டாயம் தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு அவசியம்
போதை மாத்திரை வைத்திருக்கும் நபர்களை கைது செய்யும் போலீசார், அவர்களை தீர விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர். இதேபோல் சிறையிலிருந்து வெளியே வரும் போதை வாலிபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் போலீசார் கோட்டை விடுகின்றனர். இதனால் போதை மருந்து, ஊசி புழக்கம் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments