பச்சிளங்குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை... புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை.!



புதுக்கோட்டையில் பச்சிளங்குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அரசு டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீசின் மனைவி சுகப்பிரியா, முருகேசனின் மனைவி ரேவதி ஆகிய தம்பதிகளுக்கு கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு இடது புறத்தில் உதரவிதான குறைபாட்டினால் நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் இருப்பதை கண்டறிப்பட்டது.

இதையடுத்து மகளிர் மற்றும் பச்சிளங்குழந்தைகள் ஒப்புயர்வு மையமான புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 தம்பதிகளுக்கும் தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரத்தை குறித்தும், சிகிச்சைமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

இந்த நிலையில் சுகப்பிரியாவுக்கு பெண் குழந்தையும், ரேவதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. பிறந்தவுடன் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து 2 குழந்தைகளும் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இடதுபுறம் உள்ள உதரவிதான குறைபாட்டினால் நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் ஏற்பட்டு நுரையீரல் சுருங்கியும் இருதயம் வலது புறமாக தள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. 

குழந்தைகள் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மயக்கவியல் மருத்துவர்கள் அறிவரசன் மற்றும் சுபாஷினி ஆகியோர் அடங்கிய மருத்துவகுழுவால் குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டன. இதில் இடது புற உதரவிதான குறைபாடு மற்றும் குடல் ஏற்றம் சரிசெய்யப்பட்டது.

அறுவைசிகிச்சைக்குபின் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. மூச்சுத்திணறல் சீரானதையடுத்து படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. 3 வார தீவிர சிகிச்சைக்கு பிறகு 2 பச்சிளங்குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கித்துடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். அப்போது நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர். சிக்கலான இந்த அறுவைசிகிச்சையை செய்து 2 குழந்தைகளின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றியது பாராட்டத்தக்கது. தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை அரசு ராணியார் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என டீன் பூவதி தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments