தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு




சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.

திருச்சியில் இன்று அந்த அமைப்பின் தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் அல்தாபி தலைமை வகித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அல்தாபி கூறும்போது, மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், ஜிஎஸ்டி விதிப்பு, நீட் தேர்வு, பெட்ரோல்- டீசல்- காஸ் விலை உயர்வு மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அதிமுக அரசு முழு ஆதரவு அளித்துள்ளது. இதற்காக அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்.



இந்த நிலையில், மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜகவுடன் தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எனவே, அதிமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஜனநாயகமும், இந்திய இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இதற்காகப் போராடி வரும் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு, தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் முழு ஆதரவு அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மேலும், முழு மது விலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இப்போதே வைக்கிறோம்" என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments