புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை



தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் தென்னை மற்றும் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவைகளில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. இதனைகட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளில் அடிப்பாகத்தில் இடுகின்றன.

இம்முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் இலைகளில் அடி பரப்பில் இருந்துகொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னைமரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மஞ்சள் நிறமானது வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளில் மேல் தெளிப்பான் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளைஈக்கள் மற்றும் கரும்பபூசனங்களை அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிக அளவு பரவும் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைகின்றது.

இந்த ஓட்டுண்ணி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாயிலாக தென்னை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிரிஸோபெர்லா இரைவிழுங்கிகள் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரேஷோபெர்லா விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.

இந்த இறை விழுங்கிகள் முட்டைகள் அடங்கிய அட்டையானது திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தின் வாயிலாக தென்னை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். இந்த தகவலை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் ராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments