புதுக்கோட்டையில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது!



புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தைச் சேர்ந்த சூரியநாராயணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பெரியார் நகரை சேர்ந்த பாண்டி என்பவர் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் விற்பதாக தகவல் கிடைத்தது.

மேலும் புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பாண்டி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்ததில் தடைசெய்யப்பட்ட போதை ஊசிகள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரித்ததில் ஒரு கும்பல் புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போதை ஊசி விற்ற சாந்தநாதபுரத்தை சேர்ந்த சூரியநாராயணன் (வயது 19), சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த விக்னேஷ்(23), பெரியார் நகர் பாண்டி (25), பூங்காநகர் பாஸ்கர் (34), அற்புதன் (34), ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கஸ்தூரி ரங்கா என்கிற அனுமந்தன்(19), அம்பாள்புரம் சரண் (21) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 154 போதை மாத்திரைகளும், 6 போதை ஊசிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் போதைபொருட்கள் விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பலை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments