புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் தமிழக அரசு கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளா்களுக்கு வழங்கப்பட்டதை தொடா்ந்து தற்பொழுது 45 வயது முதல் 59 வயது வரை சா்க்கரை, ரத்தக் கொதிப்பு மற்றும் இதர இணை நோயுடன் உள்ள அனைவருக்கும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை கொடுத்து போடப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பழைய அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மினி கிளினிக்குகளில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தியும் இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.  வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் போடப்படும். கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கொரோனா தடுப்பூசி போடப்படும். 

அரசு மினி கிளினிக்குகளில் முற்பகல் 8 மணி முதல் 12 மணிவரை மற்றும் மாலை  4 மணிமுதல் 7 மணி வரை தடுப்பூசி போடப்படும். கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் 18 வயதிற்கு உட்பட்டவா்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படமாட்டாது.

இதுவரை நமது மாவட்டத்தில் 24 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருவா் கூட பக்கவிளைவுகளால் பாதிக்கப்படவில்லை. இந்தத் தடுப்பூசி தொடா்பான தகவல், சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு காலை 9 மணி முதல் மாலை 6 வரை 7538893535, 7538884840 என்ற செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments