புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது!



புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கலெக்டர் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. போதை ஊசி விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் புதுக்கோட்டை டவுன் பகுதியில் சமீபத்தில் போதை ஊசி விற்ற பெரியார்நகரை சேர்ந்த பாண்டி (வயது 25), சத்தியமூர்த்தி நகர் விக்னேஷ் (23), பூங்கா நகர் பாஸ்கர் (34), அச்சுதன் (34) ஆகிய 4 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்தார்.

இந்தநிலையில் கைதானவர்களில் பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரிடம் அதற்கான நகலில் கையெழுத்து வாங்கிய பின் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதற்கிடையே போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் மீதும், சிறுவர்கள், வாலிபர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments