200 நாடுகளின் பணம், நாணயங்களைச் சேகரித்துள்ள பள்ளி மாணவர்; கண்காட்சி நடத்தத் திட்டம்




ராமநாதபுரம் அருகே மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மது அல் சுவைத் என்ற மாணவர் 200 நாடுகளின் பணம், நாணயங்களைச் சேகரித்துள்ளதுடன், அவற்றைக் கொண்டு கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுபுஹான் மீரான். இவர் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முகம்மது அல் சுவைத் (14), தனியார் பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வருகின்றார். செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நாணயச் சேகரிப்பு குறித்த செய்திகளைப் பார்த்து, தனது 10 வயதிலிருந்து நாணயச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.



அதனையடுத்து வெளிநாடுகளில் பணிபுரியும் தங்களின் உறவினர்கள் மூலமாகவும், தனது தந்தை மூலமாகவும், இணையதளங்களின் வாயிலாகவும் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வாங்கிச் சேகரித்து வருகிறார். இவரிடம் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் 1100 கரன்சி நோட்டுகளும், சுமார் 500 நாணயங்களும் தற்போது உள்ளன.


விநாயகரின் உருவம் அச்சிடப்பட்டிருக்கும் இந்தோனேசியா ரூபாய் நோட்டு
சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா, முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு. இங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனாலும், இந்தோனேசியாவில் 20,000 ரூபாய்த் தாளில் விநாயகரின் உருவம் அச்சிடப்பட்டிருக்கும் அரிதான நோட்டைச் சேகரித்து வைத்துள்ளார் முகம்மது அல் சுவைத்.

மொரிஷியஸ், ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்குக் கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மொரிஷியஸில் ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கும். அந்த நோட்டுகளும், ஜிம்பாவே நாட்டின் 100 ட்ரில்லியன் டாலர் நோட்டும், சிங்கப்பூரின் பிளாஸ்டிக் நோட்டுகளும் இவரது சேகரிப்பில் உள்ளன.


மொரிஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழ் எழுத்துகள்
இதுகுறித்து மாணவர் முகம்மது அல் சுவைத் கூறும்போது, ''உலகின் பெரும்பாலான நாடுகளின் நாணயங்களையும், நோட்டுகளையும் சேகரித்துள்ளேன். இவற்றைக் கொண்டு எங்கள் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் கண்காட்சியாக நடத்தி, அனைவரும் தெரிந்துகொள்வதுடன் அவர்களையும் சேகரிக்கும் பழக்கத்தைத் தூண்ட விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments