புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் குடல் அடைப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: அரசு டாக்டர்கள் சாதனை!!



ராணியார் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிராமத்தைச்சேர்ந்த சித்திக்கின் மனைவி ரஷியா. இவருக்கு கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனையில் சிறுகுடலின் முதல் பகுதி வளர்ச்சியின்றி சுருங்கி இருப்பதும், அதனால் பனிக்குட நீர் அதிகமாக இருப்பதும் கண்டறிப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ராணியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ராணியார் மருத்துவமனையின் தலைமை மகப்பேறு டாக்டர் அமுதா மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு டாக்டர் பீட்டர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தையையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். அதிகப்படியான பனிக்குடம் நீரினால் எந்த நேரமும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்ததால் சிறப்பு சிகிச்சை மூலம் இரண்டு முறை நீர் நீக்கப்பட்டது. இதனால் பனிக்குட நீர் இயல்புநிலைக்கு திரும்பியதையடுத்து நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்தவுடன் குழந்தைக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் இருந்ததையடுத்து குழந்தை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குழந்தைக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுகுடல் சுருங்கி இருந்ததும், இரைப்பை அதிக வீக்கத்துடனும் இருந்ததும் கண்டறியப்பட்டது. குழந்தைகள் அறுவைசிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம் மற்றும் மயக்கவியல் மருத்துவர் டேனியல் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் குழந்தைக்கு அறுவைசிகிச்சை மூலம் சிறுகுடலின் முதல் பகுதியில் இருந்த அடைப்பை சரி செய்தனர். அறுவைசிகிச்சைக்குபின் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.

மூச்சுத்திணறல் சீரானதையடுத்து படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. மூன்று வார தீவிர சிகிச்சைக்குபிறகு பச்சிளங்குழந்தை நல்ல உடல் ஆரோக்கித்துடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறுகையில்"பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவைசிகிச்சையை செய்து உயிரை காப்பாற்றிய சாதனை பாராட்டத்தக்கது. தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை அரசு ராணியார் மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments