“மே 10 முதல் கர்நாடகாவில் முழு முடக்கம்” - எடியூரப்பா





கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ம் தேதி தொடங்கி 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. இதற்கான உத்தரவை முதல்வர் எடியூரப்பா பிறப்பித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 50000 என்றளவில் இருக்கிறது. இதனால் மாநிலத்தில் மருத்துவ நெருக்கடி நிலவுகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலத்தில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு தொடர்பான அரசாணை விவரம் வருமாறு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் மே 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 25ம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் உள்ளடக்கிய வாகனங்கள் வழக்கம்போல் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். சாலை செப்பணிடுதல் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். சரக்கு வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு கிடையாது.

கடைகள், பப், பார்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்கும். சினிமா தியேட்டர்கள், ஜிம் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது. மெட்ரோ ரயில் இயங்காது. வாடகை கார், ஆட்டோக்கள் அவசர மருத்துவத் தேவை பயன்பாட்டுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்லவும் பயன்படுத்த அனுமதி உண்டு.

ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், தனிநபர்கள் பார்சல் வாங்க தங்களின் வாகனத்தை எடுத்துவர இயலாது. ஆனால், உணவகங்கள் தங்களின் வாகனங்கள் மூலம் ஹோம் டெலிவரி செய்யலாம். ஏற்கெனவே நிச்சயக்கப்பட்ட திருமணங்களை 50 பேருடன் நடத்தலாம். இறுதிச் சடங்கிற்கு 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தலாம். வங்கிகள், ஏடிஎம் மையங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.

ஐடி நிறுவனங்கள் வெகு குறைந்தளவிலான ஊழியர்களை மட்டும் நேரடியாக அலுவலகம் வரச்செய்துவிட்டு மற்றவர்களை வீட்டிலிருந்து பணி செய்யவைத்து இயங்கலாம்.

கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரையில் பணியிடத்திலேயே ஊழியர்களை தங்கவைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தற்போது கர்நாடகாவும் முழு ஊரடங்கை 15 நாட்களுக்கு அமல்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments