`சீக்கிரமா வேலைக்குப் போய் 3 தம்பிகளைக் காப்பாத்தணும்!' - பெற்றோரை இழந்த 4 சிறுவர்களின் துயர நிலை






`சீக்கிரமா வேலைக்குப் போய் 3 தம்பிகளைக் காப்பாத்தணும்!' - பெற்றோரை இழந்த 4 சிறுவர்களின் துயர நிலை

``சில நாள்கள்ல, வேலை பார்த்துட்டு அம்மா ரொம்ப களைப்பா வீட்டுக்கு வருவாங்க. அதற்கப்புறம் எங்களுக்கு சமைச்சு சாப்பாடு கொடுக்கணும். அவங்க படுற கஷ்டத்தைப் பார்த்து, அவங்க களைப்பா இருக்க அன்னைக்கு நானே சமைச்சுடுவேன்.''

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மனைவி மகமாயி. இவர்களுக்குக் கபிலன் (17), மதுபாலன் (15), மதுஸ்டன் (15), மதுபிரியன் (15) என நான்கு மகன்கள். கட்டடக் கூலி வேலை பார்த்து மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி வந்த ஆனந்தன், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துபோனார். ஆனந்தனின் இறப்புக்குப் பிறகு, தன் நான்கு மகன்களையும் காப்பாற்றுவதற்காகக் குடும்ப பொறுப்புகளைச் சுமந்த மகமாயி, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே ஊரில் அவ்வப்போது கூலி வேலையும் பார்த்து ஓய்வின்றி உழைத்து தன் மகன்களை வளர்த்து வந்துள்ளார்.

தொடர்ந்து ஓய்வின்றி உழைத்த மகமாயிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் வீட்டிலேயே முடங்கிப்போன மகமாயியை அவரின் மகன்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சைப் பலனளிக்காமல் மகமாயி உயிரிழந்தார். ஏற்கெனவே தந்தையை இழந்த அந்தச் சிறுவர்கள், தற்போது தாயையும் இழந்து நிர்க்கதியாகியிருக்கின்றனர். தாய், தந்தையை இழந்துத் தவிக்கும் அந்தச் சிறுவர்கள் இன்று ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

மூத்த மகன் கபிலனிடம் பேசினோம். ``அப்பா இருந்த வரைக்கும் அம்மா வேலைக்கு எல்லாம் போகல. அப்பா எங்களை நல்லா பார்த்துக்கிட்டாரு. தம்பிங்க மூணு பேருமே ஒரே பிரசவத்துல பொறந்தவங்க. அவங்க பொறந்த கொஞ்ச நாள்லயே அப்பா இறந்துட்டாரு. அவர் இருந்தப்போ பெருசா எங்களுக்குக் கஷ்டம் இல்ல. அதற்கப்புறம்தான் அம்மா எங்களுக்காக அறந்தாங்கிக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. சில நாள்கள்ல வேலைபார்த்துட்டு அம்மா ரொம்ப களைப்பா வீட்டுக்கு வருவாங்க. அதற்கப்புறம் எங்களுக்குச் சமைச்சு சாப்பாடு கொடுக்கணும். அவங்க படுற கஷ்டத்தைப் பார்த்து, அவங்க களைப்பா இருக்க அன்னைக்கு நானே சமைச்சிடுவேன். 

சிறுவர்கள்
தம்பிகளும் எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணுவாங்க. உடம்புல பிரச்னையை வச்சிக்கிட்டே அம்மா வேலைக்குப் போயிருக்காங்க. அவங்க இறப்புல இருந்து இன்னும் எங்களால வெளிய வரமுடியல. சித்தப்பா, அத்தைன்னு உறவுகள் இருக்காங்க. ஆனா, அவங்க தங்களோட குடும்பத்தைக் காப்பாற்றவே சிரமப்படுறாங்க; முடிஞ்ச உதவியைச் செய்வாங்க.

அம்மாவுக்கு அப்புறம் குடும்ப பொறுப்பை நான்தான் பார்க்கணும். பன்னிரண்டாவது முடிச்சிருக்கேன். இனி மூணு வருஷத்துக்குள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான ஒரு டிகிரியை படிச்சு, சீக்கிரமா வேலைக்குப் போகணும். தம்பிங்க எல்லாம் படிச்சு ஒரு வேலைக்குப் போற வரை அவங்களை நான்தான் காப்பாத்தணும். அதுக்கு, எனக்குப் படிப்புக்கான உதவியும், நான் வேலைக்குப் போற காலம்வரை என் தம்பிங்களுக்கு சாப்பாடு, படிப்புச் செலவுக்கான உதவியும் கிடைச்சா போதும். நாங்க எழுந்து மீண்டு வந்துருவோம். தம்பிங்க இப்போ எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போறாங்க. ஆன்லைன் கிளாஸுக்கு மொபைல் இல்லாம வருத்தப்படுறாங்க. எனக்கும் வழி தெரியல" என்றார் சோர்வுடன்.

சிறுவன் கபிலனின் உறவினர்களிடம் பேசினோம். ``பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்த மகமாயி, தன் உடம்பை கவனிக்காமப் போயிடுச்சு. பிள்ளைகளும் நல்ல அறிவான, பொறுப்பான பிள்ளைங்க. அம்மா வேலைக்குப் போறதுக்காக, அவனுங்க சீக்கிரமா எழுந்திருச்சு மகமாயிக்கு வேலைசெஞ்சு கொடுப்பானுங்க.

இன்னைக்கு அந்தப் பிள்ளைங்க சாப்பாட்டுக்கே சிரமப்படுதுங்க. நாங்களும் விவசாயக் கூலிங்கதான். ஊரடங்கால் ரொம்பவே சிரமத்துல இருக்கோம். எங்க சக்திக்கு கொஞ்ச நாள் அவங்களுக்குச் சாப்பாடு போட்டுடுவோம். அதற்கப்புறம் அவங்க நிலை கேள்விக்குறிதான். இப்போதைக்கு பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. அரசு உதவணும்" என்கிறார்கள்.





வாசகர்களின் கவனத்துக்கு...

உதவும் உள்ளம் கொண்டவர்கள் Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்: IDIB000C032, ஸ்விப்ட் கோட்: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `அறந்தாங்கி குழந்தைகளுக்காக’ அல்லது `For Aranthangi Kids’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அல்லது `help@vikatan.com' என்கின்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்த பின் உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.

நன்றி : விகடன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments