இலவச பஸ் பயணம்: 3 வண்ணங்களில் டிக்கெட்!



தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி சாதாரண கட்டண அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இலவச பயண சலுகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த சலுகை மூலம் அரசு பஸ்களில் எத்தனை பேர் இலவசமாக பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கிடுவதற்காக சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் பஸ் டிக்கெட் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

இந்த டிக்கெட்டுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அனைத்து பெண்களும் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகள் இன்று (நேற்று) முதல் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

இவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் 23-ந் தேதி (நாளை) முதல் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில் பஸ்கள் இயக்கப்பட்டவுடன் இந்த நடைமுறை தொடரும்’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments