அறந்தாங்கியில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.60 ஆயிரம் கள்ள நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்திய இருவா் கைது



அறந்தாங்கியில் மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.60 ஆயிரம் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், எந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து சரிபார்த்தனர். அப்போது டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.60 ஆயிரம் (2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 30) கள்ளநோட்டுகளாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், வங்கி அதிகாரிகள் எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, 2 பேர் ரூ.60 ஆயிரத்தை டெபாசிட் செய்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியில் உள்ள எந்திரத்தில் சரவணன்(வயது 38) மற்றும் அவரது நண்பர் ரவிச்சந்திரன்(41) ஆகியோர் அந்த பணத்தை ரேவதியின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தது தெரிய வந்தது.

அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளநோட்டுக்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது?, இதில், யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டுகள் புழக்கத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments