கோட்டைப்பட்டினம் அருகே மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த வடக்கு புதுக்குடி மீனவர் சடலமாக மீட்பு



கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த வடக்கு புதுக்குடி மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து கடந்த 26-ந்தேதி தினமணி, அவரது மகன் வசீகரன் (வயது 19), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில் அவர்கள் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக வசீகரன் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போனார். தொடர்ந்து அவரை அப்பகுதி மீனவர்கள், மீன் வளத்துறையினர் கடலோர காவல் குழுமத்தினர் தேடிவந்தனர். 2 நாட்கள் தேடியும் மீனவரின் உடல் கிடைக்கவில்லை.

நேற்று காலை மீனவர் வசீகரனை தேடி புதுக்குடி மீனவர்கள் சுமார் 15 படகுகளில் மீண்டும் கடலுக்குள் சென்றனர். அப்போது வசீகரன் படகில் இருந்து விழுந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் அவரது உடல் மிதந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் புதுக்குடி கிராமத்தில் குவிந்தனர்.

பின்னர் மீனவர் உடலை கடலோர காவல் குழுமத்தினர் கைப்பற்றி மணமேல்குடி அரசு டாக்டரை வரவழைத்து பிரேத பரிேசாதனை செய்தனர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. மீனவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments