நடுக்கடலில் நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்த வடக்கு புதுக்குடி பகுதி மீனவர் மாயம்: தேடும் பணி தீவிரம்!



நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு புதுக்குடியில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. இதில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். 

அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த தினமணி (வயது 46) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் தினமணி, அவரது மகன் வசீகரன் (19), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில் அவர்கள் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக வசீகரன் தவறி கடலுக்குள் விழுந்தார். இதனையடுத்து மற்ற இருவரும் அவரை காப்பாற்றுவதற்காக கடலில் தேடினர். ஆனால் கடலில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த தகவல் அறிந்த வசீகரனின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்குள் சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்பின்னரும் அவர் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலோர காவல் குழுமம், மீன்வளத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அவர்கள் காணாமல் போன வசீகரன் என்பவரை ரோந்து படகு மூலம் தேட முடிவு செய்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments