புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்



இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன்மூலம் விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருள்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். அங்ககச்சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், பட்டா சிட்டா, நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

அங்ககச்சான்றளிப்பிற்கு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளைபொருட்களை பதப்படுத்துவோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக்கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.2,700 எனவும், பிற விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3,200 எனவும், குழுபதிவிற்கு ரூ.7,200 எனவும், பெரு வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளத்தில் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவிஇயக்குனர் ஆனந்த செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments