கல்யாணம் வெச்சு இருக்கீங்களா... நீங்க இந்த மாவட்டமா இருந்தா இ-பாஸ் கட்டாயம்






மாவட்டங்களுக்கிடையேயான சில  பயணங்களுக்கு தொடர்ந்து இ-பாஸ் முறை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 21.06.21 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூன் 28-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

வகை 2, வகை 3- ல் உள்ள மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான சில  பயணங்களுக்கு தொடர்ந்து இ-பாஸ் முறை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ பாஸ் (E PASS) அவசியம்

திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

நீலகிரி , கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ - பதிவு (E REGISTRATION) தேவைப்படும் மாவட்டங்கள்

இதே போல ’வகை 2’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிக்கள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இ-பதிவுக்கும், இ-பாஸூக்கும் வித்தியாசம் என்ன?

இ-பாஸ் முறை என்பது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்பதை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள். தேவையற்ற காரணமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.

அதேநேரத்தில், இ-பதிவு முறை இ-பாஸ் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இ-பதிவு முறையில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவோ, அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயா செல்ல வேண்டுமென்றால் அந்த விவரங்களை (https://eregister.tnega.org) என்ற இணையதளத்தில் பதவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின் அந்த நகலை வைத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் செல்லலாம். இதில், அதிகாரிகள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை. பதிவு செய்வது மட்டுமே போதுமானது

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments