மனு அளிக்கப்பட்ட 15 நாட்களில் மாற்றுத்திறனாளியின் வாழ்வை மாற்றிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்






மனு அளிக்கப்பட்ட 15 நாட்களில் மாற்றுத்திறனாளியின் வாழ்வை மாற்றிய  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
   
வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் கோரிக்கை மனுவிற்கு, மனு அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. ஆட்சியரின் துரிதமான முன்னெடுப்பினால் பயன்பெற்ற மாற்றுத்திறனாளி கார்த்திக் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலரும் ஆட்சியருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சின்னகேணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். தற்போது 37 வயதாகும் கார்த்திக், தனது ஒன்றரை வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால் இரு கால்களின் செயல்திறனையும் இழந்துவிட்டார். ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த கார்த்திக், தன் சுய சம்பாத்தியத்தில் - யாரையும் சார்ந்து இயங்காமல் வாழவேண்டும் என்பதற்காக வீட்டிலேயே ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்வை நகர்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் கடன் வாங்கி புதிய வீடொன்று கட்டியதால், அந்தப் பெட்டிக் கடையை காலி செய்ய வேண்டிய  சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதன்பின்னர் கடந்த ஒரு வருடமாக வருமானம் ஏதுமின்றி தாய் இலஞ்சியத்தின் அரவணைப்பில் இருந்திருக்கிறார் கார்த்திக். மீண்டும் பெட்டிக்கடை வைத்து சுய சம்பாத்தியத்தில் வாழ வேண்டுமென்று அவர் நினைத்தாலும்கூட, அதற்கான பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். சூழலை சரிசெய்ய எண்ணிய அவர், தன் நிலையை எடுத்துக்கூறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் தனக்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மனுவை பார்த்த ஆட்சியர் கவிதா ராமு, சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தனது உத்தரவின்பேரில், கார்த்திக் மீண்டும் பெட்டிக்கடை வைத்து நடத்த ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்துள்ளார் அவர்.
 
ஆட்சியரின் நேரடி உத்தரவு காரணமாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திக்கிற்கு வங்கிக் கடன் கிடைத்து விட்டது. கடனுதவியால், தற்போது உற்சாகத்தோடு தனது வீட்டு முன்பு மறுபடியும் பெட்டிக்கடை வைத்து நம்பிக்கையோடு புதிய வாழ்வைத் தொடங்கி உள்ளார் கார்த்திக்.

கோரிக்கை மனுவை அளித்து 15 நாட்கள்தான் ஆகியிருக்கும் நிலையில், அதற்குள்ளேயே வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு உணர்ச்சிபொங்க கார்த்திக் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த செயல் மக்கள் மத்தியிலும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments