காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்




    

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
காணொலியில் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அந்தந்த வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் காணொலியில் பங்கேற்று பேசினர். விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் தனபதி பேசுகையில், நேரடி கொள்முதல் நிலையங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் கரும்பு சாகுபடிக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.


வாய்க்கால்களை தூர்வாருதல்
ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கவிநாடு கண்மாயில் இருந்து அரிமளம் ஒன்றியம் இரும்ப நாட்டு ஏரிக்கும், அங்கிருந்து ஆவுடையார்கோவில் பொன்பேத்தி ஏரிக்கும் அங்கிருந்து வேலிமங்கலம் கடற்கரை தலைமுறை வரையில் உள்ள ஏரிகள் அதன் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதனால் 100 கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் புதிதாக விவசாய உற்பத்தி பெறுவதோடு 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார். இதேபோல விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மழையளவு
கூட்டத்தில் பேசிய விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கலெக்டர் பதில் அளித்தார். அப்போது கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது:- மாவட்டத்தை பொறுத்த வரை ஆண்டு சராசரி மழையளவு 754.66 மில்லி மீட்டர் ஆகும். ஜூலை மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 199.9 மி.மீ.க்கு பதிலாக 374 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவைவிட 87 சதவீதம் கூடுதலாகும். ஜூலை மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 54.03 மி.மீ.க்கு பதிலாக 52.80 மி.மீ மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது.
உரங்கள் இருப்பு
2021-22-ம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நெல் 2071 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 114 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 149 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 934 எக்டர் பரப்பிலும், கரும்பு 46 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 60.10 எக்டர் பரப்பளவிலும், தென்னை 9 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 178.492 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 18.4 மெட்ரிக் டன் பயறு விதைகளும், 60.10 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 4.495 மெ.டன் சிறுதானிய விதைகளும், 3.59 மெட்ரிக் டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா 2827 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 958 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1185 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 2870 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
முன்னோடி விவசாயிகள்
வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் விவசாயிகளிடம் சேர்க்கும் வகையில் வேளாண் அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் ‘உழவர் -அலுவலர் தொடர்பு திட்டத்தை” தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments