புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் கவிதாராமு தேசிய கொடி ஏற்றினார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.




புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் கவிதாராமு தேசிய கொடி ஏற்றினார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பஸீனா பீவி தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. 

இதனை திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு பார்வையிட்டார். தொடர்ந்து நாட்டின் தேசிய கொடியில் இடம்பெற்றுள்ள மூவர்ண நிறத்திலான பலூன்களை அவர் பறக்கவிட்டார். மேலும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்கவிட்டார்.

பாராட்டு நற்சான்றிதழ்

அதனை தொடர்ந்து போலீஸ் உள்பட அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். மொத்தம் 343 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. 

விழாவில் திருமயத்தை சேர்ந்த வாலிபர் ஆனந்தராஜ், காகிதங்களால் உருவாக்கிய ராணுவ தளவாட மாதிரிகளை காட்சிக்காக வைத்திருந்தார். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

வேளாண் எந்திரங்கள்

விழாவில் வேளாண் பொறியியல்துறை சார்பில் தலா ரூ.37.80 லட்சம் என மொத்தம் ரூ.75.60 லட்சம் மதிப்பீட்டில் வாகனத்துடன் இயங்க கூடிய தேங்காய் பறிக்கும் 2 எந்திரங்களை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடுவதற்காக வேளாண் பொறியியல் துறைக்கு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். 

 விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) கருணாகரன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் செல்வம், கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) கபிரியேல் சார்லஸ், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) செந்தமிழ்குமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோர்ட்டு

புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் தேசிய கொடியை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் தேசிய கொடியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார். 
இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டன. நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் நாகராஜன் தேசிய கொடியை ஏற்றினார். இதேபோல அரசு பள்ளிகள், அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டன. சுதந்திர தின விழாவையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments