இளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் ? ஆய்வில் புதிய தகவல்.




இதய ஆரோக்கியம் என்று வரும் போது நாம் பெரும்பாலும் வயதானவர்களின் நலனை பற்றியே யோசிப்போம். ஏனெனில் பெருபாலும் வயதானவர்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். அதிலும் இந்தியாவில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது. எனவே, 45-50 வயதை எட்டிய ஒருவர் தங்கள் உடல் நலனை சரிபார்த்துக்கொள்வது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியர்கள் குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு முன்பிலிருந்தே இதய நோய் அபாயத்தில் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.


இதன் பொருள் என்னவென்றால் 30 வயதிற்குட்பட்ட மக்களில் கூட இருதய நோய் (CVDs) பாதிப்புகள் அதிகரித்து வருவதை குறிக்கிறது. இருதய நோய்களால் ஏற்படும் உலகளாவிய இறப்புகளில் இந்தியா ஏற்கனவே ஐந்தில் ஒரு பங்கு இறப்புகளை பதிவு செய்துள்ளது. உலகளாவிய சராசரியான 235 உடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ​​1,00,000 மக்கள்தொகைக்கு 272 என்ற வயது தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் இளைய சமுதாயத்திலும் பிரதிபலித்துள்ளது.

இளம் இந்தியர்களிடையே இதய நோய்க்கான ஆபத்து அதிகரித்து வருவதற்கு காரணம் பரம்பரை மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சுற்றுச்சூழல் காரணிகள் காலப்போக்கில் ஆபத்தை மிகவும் மோசமாக்கியுள்ளது. நீண்ட நேரம் வேலை செய்வது, அடிக்கடி மன அழுத்தம் நிறைந்த வேலைகளில் ஈடுபடுவது மற்றும் குறைவான தூக்கம் ஆகியவை தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் புதிய இயல்பாக மாறிவிட்டது. வீட்டில் இருந்தே வேலை என்ற நவீன வேலை அமைப்புகள் காரணமாக அதிக நேரம் அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை மோசமான இதய ஆரோக்கியத்தின் அபாயத்தை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சஃபோலாலைஃப் நடத்திய ஒரு ஆய்வில், பெரிய நகரங்களில் வாழும் 30 முதல் 40 வயதிற்குட்பட்ட 58% சதவிகித மக்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என்றும் அவர்கள் இதய நோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், அவர்களில் 92 சதவீதம் பேர் இதய நோய்க்கான முதல் 3 ஆபத்து காரணிகளில் இருப்பதாகவும், அவர்கள் யாரும் உடற்பயிற்சியின் செய்யாததை கருத்தில் கொள்ளவில்லை என்றும் இந்த விழிப்புணர்வு இல்லாதது பிரச்சினையை மேலும் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இளைஞர்களிடையே, நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கியபங்கு வகிக்கிறது என்பதை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆனால் உண்மை என்னவென்றால், நீண்ட நேர வேலை மற்றும் சோர்வான நாளுக்குப் பிறகு, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது மற்றும் ஆரோக்கியமற்ற துரித உணவுகள் மீதான நாட்டம் அதிகரிப்பது பெரும்பாலும் எளிதானதாகிவிட்டது. குறைவான உடற்பயிற்சி மற்றும் துரித உணவை அடிக்கடி சாப்பிடுவதால், தொப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வயிற்று பகுதியில் தேவையில்லாத கொழுப்பு அதிகம் சேருவதால் அவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக மாறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக, ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இளைஞர்கள் தங்கள் இதயத்தைப் பராமரிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் அல்ல. இதய பாதிப்புக்கான ஆபத்து காரணிகளை நீங்கள் அறிந்தவுடன், அவற்றின் தாக்கத்தை குறைக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் உணவு வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களைச் செய்வது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால், உங்களது 30 மற்றும் 40 களில் நீங்கள் செய்யும் இந்த மாற்றங்கள் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை நீண்ட காலம் பராமரிக்க முடியும்.


ஒருவர் 30வயதை எட்டிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் பொது உடல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவது நல்லது. இதன் மூலம் நோய் பாதிப்பு அறிகுறிகளை முன்பே அறிந்து, அதனை உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட முடியும். வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சுமார் இருபது நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்த்துக் கொள்வதும் அவசியம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை கூட வேலை நேரங்களுக்கு இடையில் நீங்கள் செய்ய முயற்சிக்கலாம். உடற்பயிற்சி மற்றும் யோகாவுடன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் சிற்றுண்டி நேரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். அதுதவிர நட்ஸ், பச்சை இலை காய்கறிகள், வெண்ணெய் மற்றும் ஓட்ஸ் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான பொருட்களை தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதய ஆரோக்கியத்திற்கு உகந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்துவது நீங்கள் செய்யக்கூடிய ஒரு சிறந்த மற்றும் எளிதான மாற்றமாக இருக்க வேண்டும். இதுபோன்ற நல்ல வாழ்க்கை முறை பழக்கங்கள் இதய ஆபத்தை குறைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இன்று முதல் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments