முத்துக்குடா கடற்பகுதியில் சுற்றுலா தளம் அமைக்க படகில் சென்று ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!



சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் மதிப்பை உணர்த்தும் வகையில் சர்வதேச அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆவுடையார் கோவில் தாலுகா முத்துக்குடா கடற்கரைப் பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா தலங்கள் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்நிலையில் வரும் 27ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்குடா கடற்பகுதியில் மாவட்ட ஆட்சியர் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகிலுள்ள நாட்டுப் படகு மூலமாக தான் செல்ல வேண்டும். மேலும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் முத்துகுடா பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அப்பகுதியில் படகு மூலம் அறந்தாங்கி கோட்டாட்சியர் மீன்வளத்துறை அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள், நாட்டாணி புரசக்குடி பஞ்சாயத்து தலைவர் சீதாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கோட்டைப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன், மீமிசல் காவல்துறை உதவி ஆய்வாளர் வைத்திய லிங்கம், ஆவுடையார்கோவில் தாசில்தார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். 

முத்துக்குடா பகுதியை சுற்றுலாத்தலமாக ஆக்கினால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பெரிதும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments