இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் மீது வழக்கு!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகில் தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் எடை குண்டு பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பேரில் நேற்று இப்பகுதியில் புதுக்கோட்டை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மூன்று விசைப்படகுகள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்களின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 3 விசைப்படகுகள் மீது மீன்வளத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments