கோபாலப்பட்டிணம் பழைய காலனி-தோப்பு சாலையை சூழ்ந்திருக்கும் கருவேல மரங்கள்! குண்டும் குழியுமான சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் டெங்கு பரவும் அபாயம்!! ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!



கோபாலப்பட்டிணம் பழைய காலனி-தோப்பு சாலையில் கருவேல மரங்கள் சூழ்ந்தும் குண்டும் குழியுமாகவும், சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பழைய காலனியிலிருந்து அரண்மனை தோப்பு மற்றும் மீமிசல் செல்லும் தார்ச்சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் சூழ்ந்தும், குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அரண்மனை தோப்பு பகுதிக்கு குடிதண்ணீர் எடுக்க செல்லும் பெண்கள் மற்றும் மீமிசல் செல்லக்கூடிய பெரியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர்.
பழைய காலனியில் இருந்து அரண்மனை தோப்புக்கு செல்லும் இந்த தார்ச்சாலை பல வருடங்களுக்கு முன்னர் போடப்பட்டது. எனவே பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.மேலும் இந்த சாலையில் ஒரு இருசக்கர வாகனம் சென்றால் இன்னொரு இருசக்கர வாகனம் எதிரே வரமுடியாத அளவிற்கு கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளது.

இந்த சாலையானது மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த வழியாக தோப்பில் குடி தண்ணீர் எடுத்து வரக்கூடிய பெண்கள், வாகனத்தில் சென்று குடிதண்ணீர் எடுத்து வரக்கூடிய வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெளியூர் சென்று வரக்கூடிய மாணவர்கள், வேலைக்கு அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள், மீமிசல் கடைத் தெருவிற்கு சென்று வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் இதை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.


மேலும் குப்பைகளால் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையை சூழ்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும், குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் சாலை ஓரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும், குப்பைகளால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே  தாமதப்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலை மட்டுமல்லாது கோபாலப்பட்டிணத்தில் இதுபோன்று பல இடங்களில் குண்டும் குழியுமான சாலையையும் சீரமைக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments