நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வார்டு உறுப்பினர்கள் குற்றசாட்டு: கூட்டத்தை விட்டு பாதியில் வெளிநடப்பு!



மீமிசல் அருகே உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டி ஊராட்சிமன்ற கூட்டத்தில் இருந்து அனைத்து வார்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் பார்வையாளராக கலந்து கொண்ட கூட்டம் 12.11.2021 அன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம், கணபதிப்பட்டிணம், குறிச்சிவயல், முத்துக்குடா(மீனவர்), நாட்டாணி, ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்), ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்), முத்துக்குடா(முஸ்லிம்), அண்டியப்பன்காடு, கூடலூர்,, பாதரக்குடி, புரசகுடி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் சீதாலெட்சுமி என்பவர் தலைவராக உள்ளார். மேலும் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாத காலமாக மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடைபெறவில்லை என வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து ஊராட்சி மன்ற கூட்டம் கடந்த 12.11.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படுவதில்லை எனவும், வார்டுகளில் வேலைகள் நடைபெற்றால் வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து வட்டாரவளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். இதுகுறித்து 12.11.2021 அன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் சீதாலெட்சுமியிடம் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கேள்வியெழுப்பினர்.

மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை, சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படவில்லை, குண்டும், குழியுமான சாலை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படவில்லை, டெங்கு வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க கொசு மருந்து அடிக்கவில்லை எனவும், கடந்த ஒரு வருட காலமாக வாய்க்கால் வசதி சரி செய்து தரப்படவில்லை என்கின்றனர்.

மேலும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக 12-வது வார்டு உறுப்பினர் பிரேமா வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த செப்டம்பர் மாதம் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். இந்நிலையில் புகார் குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணையும் மேற்கொண்டார். அதனடிப்படையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வார்டு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதனடிப்படையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதை வார்டு உறுப்பினர்களிடம் கூறினார்.அவர் கூறியதாவது, கணக்குகள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது, இதில் ஏராளமான செலவினங்களுக்கு செலவு சீட்டு மற்றும் துணை செலவு சீட்டு ஆய்வில் சமர்ப்பிக்கவில்லை.யாருக்கு வழங்கப்பட்டது என்ற விபரம், ஊராட்சி தீர்மான எண் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்வாறாக லட்சக்கணக்கான ரூபாய் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி கையாடல் செய்துள்ளார் என தெரிவித்தார்.

இதனையடுத்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுவந்தது உறுதியானதையடுத்து வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தகவல்: அபுதாஹீர், 3-வது வார்டு உறுப்பினர், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments