காத்திருப்பு நேரம் பாதியாக குறைகிறது ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவு 3 மணி நேரத்தில் தெரியும் சென்னை விமான நிலைய இயக்குனர் தகவல்





சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுக்காக இனி 6 மணி நேரம் பயணிகள் காத்திருக்காமல், 3 மணி நேரத்திலேயே முடிவை தெரிந்து கொள்ளலாம் என விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் தெரிவித்தார்.

விமான நிலைய இயக்குனர்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இது பற்றி விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 700 பேர் வரை சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய கட்டணம் ரூ.3,400-ல் இருந்து ரூ.2,900 ஆகவும், ஆர்.டி.பி.ஆர். சோதனை கட்டணம் ரூ.700-ல் இருந்து ரூ.600 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

சோதனை நேரம் குறைப்பு

தற்ேபாது ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை முடிவு 45 நிமிடத்தில் இருந்து 30 நிமிடமாகவும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நேர முடிவு 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிேசாதனை செய்து கொள்ளும் பயணிகள், இனி விமான நிலையத்தில் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டாம். 3 மணி நேரத்திலேயே முடிவை தெரிந்து கொள்ளலாம். கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து சென்னை வந்த 5,816 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை.

சிங்கப்பூர் நீக்கம்

ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை கட்டாயம் என்ற பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நாடு நீக்கப்பட்டு உள்ளது. டெல்டா வைரசைவிட ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பன்னாட்டு பயணிகளிடம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

விமான நிலையத்துக்கு ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை கட்டணங்களை ஆன்-லைனில் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் சென்னை விமான நிலைய துணை பொதுமேலாளர் பாபி, மக்கள் தொடர்பு மேலாளர் விஷ்ணு ஆகியோர் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments